Monday, March 12, 2012

சாதிக்கச்சொன்னவனே சாதிக்க காத்திருக்கோம்



























நினைத்தாலே நிறை நெஞ்சில்
நெருப்பெரியும்

இமை தாண்டி விழி நீரும்
பெருக்கெடுக்கும்

மலர்ச்செடியல்ல நீ
தீச்செடி

தீயாய் பூ பூத்து
திசையெங்கும் தீ வளர்த்தாய்

வேர்களை விற்று
பூக்களாய் சிரித்திருந்தாய்

போராளியாய் இருந்த நீ எப்படி
ஞானியைப்போல் போதும் என்று முடிவெடுத்தாய்

நீ உழைத்து உருவாக்கிய உப்புக்கடல் இப்போது
கானல் நீரானதே

ஓட்டை படகில் ஊர் தேடும் எங்களுக்கு
கலங்கரையாய் உன் ஞாபகங்கள்

உன் ஞாபகமழையில்
குடைகள் கிழிகின்றன


மரங்கள் காற்றின் கறை வெளுப்பது போல் உன்
மரணம் பலரின் குறை தொடைத்ததுவே

எத்தனை செவிகளுக்கு
உன் பெயர் தேனை பாய்ச்சியிருக்கும்

குறைகொண்ட நெஞ்சங்கள்
நின் பெயர் சொல்லி நிறைந்திருக்கும்

ஆதிக்கசக்திகள் சோதிக்க நினைத்து
சாதித்து நின்ற உனை சாய்த்தேவிட்டனரே

தலை தொங்கி நின்றதனால்
வெறும் பழுதென நினைத்தனரோ

விழுதாய் தலை நிமிரும் கூட்டம்
உன் கூட்டம்

வீழ்ந்துவிட்டதனால் விறகல்ல நீ விதை
விருட்ஷமாய் வளர்த்தெடுப்போம்

நீ நிறைந்த இடம் தேடி
நெஞ்சம் பனித்திருக்கும்

வானிருந்து வாழ்த்து வரும்
விழித்துடைக்க காற்றுவரும்

திசைகள் தெரியாது
செய்வதுமறியாது
நட்டாற்றில் நின்றபோதும்
துடுப்பாய் உன் பெயர்தந்து
சாதிக்கச்சொன்னவனே
சாதிக்க காத்திருக்கோம்
உன் பெயரைக்காத்திருப்போம்

Sunday, March 4, 2012

இருவரின் தேடல்-காதல்



















இருவரின் தேடல் காதலாய் தொடக்கம்
எதிர்பார்ப்பும் தேவைகளும்
தீரும் என்பதன் தேடலின் முடிவில்
திருமணத்தொடக்கம்

உண்மையைத்தேடி
உடலைத்தாண்டி
உள்ளத்தை தந்தவர்களுக்கு
திருமணம் ஓர் சுகம்

பொய்யைத்தேடி
தேக சுகம் நாடி
போலியாய் இருந்தவர்களுக்கு
திருமணம் ஓர் சோகம்


சுகம் தேடிகளின் கால்கள்
விடுதலை வேண்டி இன்று
நீதி மன்றங்களின்
படிகட்டுகளில்

ஊரே எதிர்த்து
ஓடிவந்தவர்கள் இன்று
உலகே பார்க்க ஓற்றை கயிறில்
தொலைந்து போனார்கள்

ஒற்றை பார்வையில்
உயிர் வாழ்ந்தவர்கள் இன்று
வயிற்றுப்பசியில்
வாழ்விழந்தார்கள்

நெற்றி வேர்வையில்
நிலாவை கண்டவர்கள் இன்று
குற்றம் கண்டே
குமைந்து போயினர்

குயிலாய் ஒலித்த
கோதையின் குரலின்று
கோட்டனானின் குரலாய்
காதைக்கிழிக்கிறது

மூச்சுக்காற்றில்
உடல் சிலிர்த்த தேகமின்று
மூச்சை நிறுத்த
துடியாய் துடிக்கிறது

அவள் முகம் மட்டுமே
அழகாய் தெரிந்த கண்களுக்கு இன்று
அவளைத்தவிர
அனைவருமே அழகாய் தெரிகிறது

ஒற்றை இதழ் முத்தத்திற்காய்
கொக்காய் நின்றவர்கள் இன்று
யுத்தமே சத்தமாய்
முடமாகிப்போனார்கள்

காலடி ஓசைக்காய்
காத்திருந்த காதுகள் இன்று
மனமுறிவு தீர்ப்புக்காய்
தவம் கிடக்கிறது

கால்நக அழுக்கை
களைந்த அவன் கண்களுக்கு இன்று
கண்ணீரில் மிதக்கும் அவள்
கவலைகள் தெரியவில்லை

உடல் தேடி உறவாடும் காதல்
கூடிப்பிரிந்திடும். வேறோர் உடல் தேடி...
உளம் தேடி உறவாடும் காதல்
நாடி உயிர்க்கூடி விழுதாய் வேர்விடும்